search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லியில் விவசாயிகள் போராட்டம்"

    தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #hydrocarbon #tngovt

    திருச்சி:

    திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது :-

    விவசாயிகளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி அளிக்கும் கட்சிகளுக்கே விவசாயிகளின் வாக்கு. அவ்வாறு விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக 29 மாநிலங்களிலும் பிரசாரம் செய்வோம். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த திட்டங்களும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.‌ தமிழக பட்ஜெட்டிலும் மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இல்லை.

    விவசாயிகள் கடனிலே பிறந்து வாழ்ந்து மடிய வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வீணாக செல்வதை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் இந்த மாதம் 25ந் தேதிக்கு பிறகு தற்கொலை செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    மேலும் வருகிற 21ந் தேதியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 28, 29-ந்தேதிகளில் டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம். எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோகார்பன் எடுக்க விடமாட்டோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #hydrocarbon #tngovt

    விவசாயிகளிடம் பேச 5 நிமிடம் கூட ஒதுக்காத பொறுப்பற்ற பிரதமராக மோடி இருப்பது நாட்டின் சாபக்கேடு என வைகோ குற்றம்சாட்டி உள்ளார். #MDMK #Vaiko #PMModi
    சென்னை:

    இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியராக இருந்த மறைந்த விக்கிரமனின் 3-ம் ஆண்டு நினைவு விழா, இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும், எழுத்தாளர் ஆர்.சூடாமணி சார்பில், ‘மஞ்சள் நதி மீன்கள்’ என்ற நாவலுக்காக அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவாக சிறந்த நாவலுக்கான சிறப்பு பரிசாக ரூ.5 ஆயிரத்துக்கான பொற்கிழியை, எழுத்தாளர் மதுராவுக்கு வழங்கினார். இதுதவிர, இலக்கியப்பீடம்-மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற 12 எழுத்தாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்களையும் வைகோ வழங்கினார்.

    மேலும், ‘இலக்கியப்பீடம் பரிசு பெற்ற நாவல்கள்’, ‘இலக்கியப்பீடம் பரிசு பெற்ற கட்டுரைகள்’ என்ற புத்தகங்களின் முதல் பிரதியை வைகோ வெளியிட எழுத்தாளர் மெய்.ரூஸ்வெல்ட் பெற்றுக் கொண்டார்.

    இந்த விழாவில் பேராசிரியர் ராம.குருநாதன், எழுத்தாளர் மாம்பலம் ஆ.சந்திரசேகர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் கோ.பெரியண்ணன், இலக்கியப்பீடம் ஆசிரியர் கண்ணன் விக்கிரமன் (விக்கிரமனின் மகன்), விக்கிரமனின் மனைவி ராஜலட்சுமி, மகள்கள் உமாதேவி, ஹேமமாலினி, ஜெயந்தி மற்றும் எழுத்தாளர் சிவசங்கரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-


    நாட்டின் 90 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். 4 மாத காலமாக சாலையில், வெயிலிலும், மழையிலும், பனியிலும் கிடந்த விவசாயிகளை பார்க்க 5 நிமிடம் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னங்கன்றுகள் கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மட்டும் பொறுப்பாக கூறி உள்ளார். மக்கள் நிலைமையை உணர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வரவில்லை. பிரதமருக்கு விதவிதமாக உடை அணிவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்ற 2 போதைகள் உள்ளன. இதில் இருந்து நரேந்திர மோடி ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ திட்டத்தை தொடங்கக்கூடாது என்று 3 ஆண்டுகள் தடை வாங்கி வைத்துள்ளேன். இந்தநிலையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளித்துவிட்டால் எந்த மாநில அரசுகளையும் கேட்க வேண்டியது இல்லை என்று கூறப்படுகிறது.

    இதேபோன்று மாநிலங்களில் உள்ள அணைகளில் அந்தந்த மாநிலங்களுக்கு தான் அதிகாரம் உண்டு என்ற அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற போகிறார்கள். இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #PMModi
    டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து வந்த விவசாயி இன்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.

    நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளவர்கள் டெல்லியில் உள்ள பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.


    அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு குழுவினர் பர்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவன் கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று தவறி கீழே விழுந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் கிரண் சன்ட்டப்பா(52) என்றும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தினார். #farmersloans #RahulGandhi #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். எனினும், பாராளுமன்றத்துக்கு சற்று தூரத்தில் அவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகிறது.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இங்குவந்து உரையாற்றிக் கொண்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ‘ராம் ராம்’ என்று உச்சரித்தபடி ராமர் கோவில் என்ற ஒரே ஆயுதத்தை மோடியும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவையும் உயர்த்திப் பிடிக்க தொடங்கியுள்ளதாகவும்,  விவசாயிகளைப்பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.


    தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் சிவாமிநாதன் குழு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.

    அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவோம். விவசாயிகளுக்கான போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், வெற்று வாக்குறுதிகளை தவிர வேறு எதுவுமே நடக்கவில்லை. இப்போது விவசாயிகளின் நிலைமையை பாருங்கள்.

    விவசாயிகளின் நல்ல எதிர்காலத்துக்காக நாங்கள் எல்லாம் அவர்களுடன் துணையாக இருப்போம். விவசாயிகளையும், இளைஞர்களையும் மத்திய அரசு வஞ்சித்தால் இந்த ஆட்சியை அவர்கள் தூக்கி எறிவார்கள்.

    கடன் தள்ளுபடியை அரசிடம் இருந்து விவசாயிகள் பரிசாக எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குண்டான உரிமைக்காகதான் அவர்கள் போராடி வருகின்றனர்.

    தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால் விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்தாக வேண்டும். விவசாயிகளின் சக்தியால்தான் இந்த தேசம் உருவாகியுள்ளது. நீங்கள் அச்சப்பட வேண்டாம். நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம் என்பதை இந்த நாட்டில் உள்ள விவசாய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்று கூறினார். #farmersloans #RahulGandhi #Delhifarmerprotest
    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். எனினும், அவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. #Farmersmarch #marchingtoParliament #Delhifarmersmarch
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும், பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவும் விவசாயிகள் முடிவு செய்தனர். இதையடுத்து 29 மாநிலங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து, “அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு” உருவாக்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதிலும் இருந்து இந்த அமைப்பு மூலம் டெல்லி நோக்கி விவசாயிகள் அழைக்கப்பட்டனர். டெல்லிக்கு அருகே உள்ள மாநிலங்களின் விவசாயிகள் பஸ் மற்றும் கார்களில் டெல்லியில் குவிந்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 24 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ரெயில்கள் மூலம் டெல்லி வந்து சேர்ந்தனர்.

    நேற்று பிற்பகல் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் திரண்டனர். டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டப்படி சென்றதால் டெல்லி குலுங்கியது. அவர்களுடன் டெல்லி பல்கலைக்கழக மாணவ- மாணவிகளும் சேர்ந்து கொண்டு கோ‌ஷமிட்டனர்.

    டெல்லி புறநகரின் நாலாபுறத்தில் இருந்தும் வந்த விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் ஒன்று திரண்டனர். அங்கு அவர்கள் “கடன் இல்லாத விவசாயி - தற்கொலை இல்லாத இந்தியா” என்று குரல் எழுப்பினார்கள். சில விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள், “அயோத்தி வேண்டாம், விவசாயி வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.



    ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக செல்லப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன. ஆனால், பாராளுமன்றம் நோக்கி பேரணியாக வரக்கூடாது என்று போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி  செல்ல முயன்றால் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி போலீசார் அறிவித்தனர்.

    ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதிவரை பேரணி செல்ல டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். பேரணி செல்லும் பாதையில் சுமார் 3,500 போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றதால் டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களாக சுமார் ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தை நெருங்கியதும் பாராளுமன்றத்தை நோக்கி முன்னேறி செல்லாதவாறு இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தவாறு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டவாறு விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடையே விவசாய சங்க தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். #Farmersmarch #marchingtoParliament #Delhifarmersmarch
    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMmodi
    சென்னை:

    பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதில் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பலர் அரை நிர்வாணமாக ஊர்வலத்தில் கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

    இதுபற்றி கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-


    தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே பிரதமர் ஓடிவந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.

    விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.  #FarmersProtest #Kanimozhi #PMModi
    நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TNFarmersProtest #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், 60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு டெல்லியில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்ட குழுவில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 1,300 பேர் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 29 மாநில விவசாயிகளும், 4 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 207 விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் என மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    நேற்று இவர்கள் டெல்லியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அவர்கள் இன்று டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்தனர்.

    இதற்காக தமிழக விவசாயிகள் 25 பெண்கள் உள்பட 1,300 பேரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 8 மணிமுதல் திரண்டனர். அதேபோன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் யோகேந்திர யாதவ், தலைமையிலும் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் என லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருந்தனர்.

    எங்கு பார்த்தாலும் பச்சை துண்டுகளுடன் விவசாயிகள் தலைகளாக காணப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் 10 மணிக்குள் மத்திய அரசு வந்து கோரிக்கை குறித்து, உறுதி கூறி, நிறைவேற்ற வாக்குறுதி தராவிட்டால் பேரணியில் முழு நிர்வாணமாக செல்வோம் என அறிவித்திருந்ததால் பரபரப்பாக இருந்தது. பேரணி இடத்தில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் மற்றும் மத்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


    நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு டெல்லி ஆம் ஆத்மி எம். எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்கள் நேரடியாக வந்து உணவு வழங்கினர். இன்று காலையும் பேரணி தொடங்கும் முன்பு விவசாயிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

    ராம்லீலா மைதானமே பரபரப்புடன் காணப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது.

    தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பாராளுமன்றம் நோக்கி செல்வோம் என அறிவித்திருந்ததால் டெல்லி போலீசார் அவர்கள் இடத்தில் கூடுதல் போலீசாரை நிறுத்தி இருந்தனர்.

    இதுகுறித்து பேரணியில் நின்ற திருச்சி அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஏற்கனவே டெல்லியில் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அன்று நாங்கள் தொடங்கிய போராட்டம் இன்று இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகளை டெல்லியில் திரள வைத்துள்ளது.

    தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் வரை 3 கி.மீட்டர் நிர்வாணமாக செல்ல உள்ளோம். விவசாயிகளின் வேட்டி, சட்டையை ஏற்கனவே மத்திய அரசு கழற்றிவிட்டது. இப்போது எங்கள் கோவணத்தையும் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் கழற்றிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் செல்ல உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNFarmersProtest #FarmersProtest
    விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்து விட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்,

    அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் இன்றும், நாளையும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக கடந்த 27-ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை டெல்லி சென்றடைந்தனர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய அவர்கள் ரெயிலை மறித்தனர். என்ஜின் மீது ஏறி நின்ற அவர்கள் தண்டவாளத்திலும் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக விவசாயிகள் கழுத்தில் மண்டை ஓடு, எலும்பு மாலை அணிந்து அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த காட்சி.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து விவசாயிகள் கையில் மண்டை ஓடு, கழுத்தில் எலும்பு மாலை அணிந்தவாறு அரை நிர்வாணத்துடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இன்றும், நாளையும் அவர்கள் ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், மாநில செயலாளர்கள் வந்தவாசி தினேஷ், முருகன், கடலூர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் சென்னை மாவட்டம் ஜோதிமுருகன், விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் சண்முகம், கோவை மாவட்டம் படிஸ்வரன், திருச்சி மாவட்டம் பொன்னுசாமி, கரூர் மாவட்டம் சரவணன் , திருவள்ளூர் மாவட்டம் நாககுமார், தஞ்சாவூர் மாவட்டம் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே டெல்லியில் திருச்சி விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். பாராளுமன்றம் முன்பு ஆடைகள் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் தமிழக விவசாயிகளால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest
    டெல்லியில் மிகப்பிரமாண்ட போராட்டத்தை நடத்துவதற்காக நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். #FarmersProtest
    புதுடெல்லி:

    டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். 207 விவசாய அமைப்புகள் இணைந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இப்போராட்டம் நடக்கிறது. கடன் நிவாரணம், விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.


    இன்று (வியாழக்கிழமை) டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமலீலா மைதானத்துக்கு ஊர்வலமாக செல்கிறார்கள். நாளை அங்கிருந்து பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். நாடாளுமன்ற தெருவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்களிடையே பா.ஜனதா தவிர, இதர கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள். விவசாய சங்க தலைவர்களும் விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசுகின்றனர்.

    டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர். #FarmersProtest
    ×